துன்புறும் மெசியா

21.02.14 – மாற்கு 8: 34 – 9: 1
நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவருமே தாங்கள் யாருக்கு நற்செய்தியை எழுதுகிறோமோ, அவர்களுக்கு ஏற்றவாறு இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் பிற இனத்துக்கிறிஸ்தவர்கள், இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சூழ்நிலையில் அவர்களுக்கு இந்த நற்செய்தியை எழுதுகிறார். இயேசு ‘துன்புறும் மெசியா’ என்ற பார்வையில் அறிமுகப்படுத்துகிறார். இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதிகளில் பேதுரு தன்னை மெசியா என்பதை இயேசு ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதே பேதுருவை, அடுத்த பகுதியில் கடிந்துகொள்கிறார். இதில்தான் இயேசு சிறிது மாறுபடுகிறார். இயேசு மெசியா தான். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், மற்றவர்கள் நினைப்பது போன்ற மெசியா அல்ல அவர். மாறாக, துன்புறும் மெசியா. துன்பத்தின் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பைக்கொண்டு வர இருக்கிற மெசியா.

துன்பத்தை பொதுவாக கடவுளின் சாபமாக மக்கள் பாhத்தார்கள். அவர்களுக்கு மீட்பே இல்லை என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், இயேசு துன்பத்தையும் அர்த்தமுள்ளதாக்க முடியும், துன்பத்தின் வழியாக மாட்சிமையையும் அடைய முடியும் என்று வலியுறுத்திக்கூறுகிறார். குறிப்பாக, இயேசுவை பின்செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் துன்பம் தான் பரிசாக இருக்க முடியும். துன்பத்தைக்கண்டு அஞ்சத்தேவையில்லை. துன்பத்தை தாங்கும் வலிமையை இறைவன் தருவார். அவர் நம்மை வழிநடத்துவார். ஆனால், இயேசு சொல்ல விரும்புவது, இதுதான். இயேசுவுக்காக வாழ முற்படும்போது, துன்பத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெயரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே நிச்சயம் நமக்கு மீட்பு உண்டு.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.