ஆள்வதும் ஆளப்படுவதும்
மாற்கு 12: 1 – 12
பேராயம் புல்டன்ஷின் இவ்வாறு கூறுவார் “கோபத்தை நாம் ஆண்டால் சமூகத்தின் தீமைகள் மட்டிலான சாட்டையடியாகவும் பிறரைத் திருத்துவதற்கான வாய்ப்பாகவும் மாறுகிறது. கோபத்தால் நாம் ஆளப்பட்டால் அது உறவிற்கு ஊறு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது. பயத்தை நாம் ஆண்டால் பாவங்கள் மற்றும் தவறான காரியங்களிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க அது உதவுகிறது. பயத்தினால் நாம் ஆளப்பட்டால் எல்லாவற்றையும் கண்டு பயந்து, மிரண்டு முயற்சி எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வாழும் வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அன்பை நாம் ஆண்டால் அது நல்ல உறவுகளைக் கட்டியெழுப்ப உதவுகிறது. உற்சாகப்படுத்த வேண்டிய நேரத்தில் மற்றவர்களை உற்சாகப்படுத்தி திருத்த வேண்டிய நேரத்தில் மற்றவர்களை திருத்தி நாமும் பிறரை வாழ வளர உதவுகின்றது என்று கூறுவார்.
இன்றைய உவமையில் வரும் பணியாளர் முதல் வகையான ஆளுமையைப் பெறுகின்றார். அதுதான் அவரை இன்னும் அதிகமான ஆசைக்கு இழுத்துச் செல்கின்றது. சிந்தித்து பார்த்தோமென்றால் தோட்டத்தின் உரிமையை பெறக்கூடிய ஆளுமையாக மாறிவிடுகிறது. திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. இதன் உரிமையாளர் இஸ்ரயேல் மக்களை அழைத்துக் கட்டிக் காத்த யாவே கடவுள் தான். தோட்ட தொழிலாளர்கள் இஸ்ரயேல் என்னும் தோட்டத்தைப் பராமரித்த யூத அதிகாரிகள் அல்லது குத்தகைகாரர்கள். தோட்டத்தை ஆய்வு செய்யவும் வழிநடத்தவும் அதனுடைய பலன்களைப் பெறவும் தோட்ட உரிமையாளரால் அனுப்பப்பட்ட பணியாளர்கள் தான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடையே அனுப்பிய இறைவாக்கினர்கள். இறுதியில் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் தான் இயேசு கிறிஸ்து. இந்த உவமை தங்களை பற்றியதே என்று யூதர்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் இயேசுவுக்கு எதிராக தீட்டிக் கொண்டிருந்த திட்டங்களை அறிந்து தம் மரணம் நெருங்கி விட்டது என்கிற கருத்தில் தான் இயேசு இதனை கூறினார்.
நம்முடைய ஆளுமை அன்பை மையப்படுத்துகிறதா? அல்லது அதிகாரத்தை மையப்படுத்துகிறதா? சிந்திப்போம்.
– அருட்பணி. பிரதாப்