தன்னலமில்லாத தலைவர்கள்

இன்றைக்கு நமது நாட்டில் ஏராளமான தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறோம். ஒரு சில தலைவர்களின் பிறந்தநாளில் பொதுவிடுமுறை அறிவித்து, அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். முகநூல் பதிவுகளில் இன்றைக்கு சமுதாயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நல்ல மனிதர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், இவர்கள் வாழ்ந்தபோது, இப்போது வாழ்ந்தகொண்டிருக்கிற நல்ல மனிதர்களுக்கு, அவர்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கிறோமா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. “லைக்“ போடுவதோடும், “கமெண்ட்” எழுதுவதோடும் நின்றுவிடுகிறோம். அவர்களை வெறும் அடையாளத்திற்குத்தான் வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை ஆளவோ, அதிகாரத்தைக் கொடுக்கவோ நாம் விடுவதில்லை.

இரோம் ஷர்மிளா, மேதாபட்கர், சுப.உதயகுமார், தோழர் நல்லகண்ணு என்று, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மக்களுக்காக உண்மையாக உழைக்கிறவர்களை நாம் எப்போதும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது இப்போது மட்டும் அல்ல. இஸ்ரயேல் மக்களின் தொடக்க கால வரலாற்றிலிருந்தே நாம் பார்க்கலாம் என்பதைத்தான், இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் இந்த உலகத்தைப் படைத்த தருணத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் கடவுளின் ஆவியால் தூண்டப்பட்டு, மக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் முடிவு பரிதாபமாக இருந்திருக்கிறது. கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நினைவுச்சின்னங்களையும் எழுப்பியிருக்கிறார்கள். உயிரோடு இருந்தபோது அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்கள், கொலை செய்தவர்கள், நினைவுச்சின்னங்களை எழுப்பியிருப்பது, கொடுமையிலும் கொடுமை. இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

நல் மனிதர்களை நாம் எப்போதும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய சமூக அங்கீகாரத்தையும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்த சமூகத்திற்கு விடிவு கிடைக்குமேயன்றி, மற்ற வழிகளில் வாய்ப்பு இல்லை. உண்மையான பொதுநலவாதிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.