தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75

“தேடுதல்“ என்கிற வார்த்தை, காணாமற்போன ஒன்றை நாம் மீட்பதற்கு செய்யக்கூடிய செயலைக்குறிக்கக்கூடிய சொல். கடவுள் தம் மக்களைத் தேடிவருகிறார் என்றால் என்ன? இஸ்ரயேல் மக்களை கடவுள் தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருந்தார். இதனுடைய பொருள், கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டும் மிகுதியாக அன்பு செய்தார் என்பதல்ல. ஏனென்றால், எல்லா மக்களுமே கடவுளின் சாயலைப் பெற்றவர்கள் தான். அவர்களையும் கடவுள் அன்பு செய்கிறார். ஆனால், தான் வாக்களித்திருக்கிற மீட்பை, இந்த உலகத்திற்குக் கொண்டு வர, கடவுள் இஸ்ரயேல் மக்களை கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறார். எனவே, அவர்களை தன்னுடைய மீட்புத்திட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்தாலும், கடவுள் தங்களைத் தண்டிக்க மாட்டார் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். இது கடவுளுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. தாங்கள் செய்த தவறுக்கு இஸ்ரயேல் மக்கள் தகுந்த தண்டனையை அனுபவிக்கிறார்கள். “நான் சொன்னதைக் கேட்கவில்லை, இனிமேல் இவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன்” என்று கடவுள் அவர்களை விட்டுவிடவில்லை. தாயன்போடு தன்னுடைய தேர்ந்தெடுத்த மக்களை தேடிவருகிறார். அந்த அன்பு மாட்சிமைக்குரியது. இவ்வளவு தவறுகள் தாங்கள் செய்திருந்தாலும், தொடர்ந்து நம்மோடு பயணிக்கிற உன்னத கடவுளைப் போற்ற, திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.

நமது வாழ்க்கையில் நாம் கடவுளை நாடி வரக்கூடியவர்களாக எப்போதும் இருப்போம். ஏனெனில் நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நம்மைக் காக்கக்கூடியவராக இருக்கிறார். அந்த கடவுளிடத்தில் நாம் நம்மையே ஒப்படைப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.