ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்

திருப்பாடல் 112: 1 – 2, 7 – 8, 9

ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர் யார்? கடவுளை தங்களது வாழ்வில் முதன்மையானவராக ஏற்றுக்கொண்டவர்கள் தான், ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நெருங்கிய உறவு என்று யாராவது இருப்பர். அது நட்பின் அடிப்படையில் அமைந்திருக்கலாம், உறவினராக இருக்கலாம். நமக்கு பிடித்தவர்களாக இருக்கலாம். நம்முடைய வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நாம் அவர்களிடத்தில் ஆலோசனை செய்துதான், முக்கிய முடிவுகளை எடுப்போம். அவர்களிடம் தான், நாம் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்போம். ஆண்டவரில் நம்பிக்கை கொள்வது என்பது, கிட்டத்தட்ட இப்படிப்பட்ட உறவு தான்.

நமது வாழ்வில் நாம் எதைச்செய்தாலும், கடவுளை நம்பி, கடவுளின் வழிநடத்துதலை நம்பி, அவருடைய எண்ணத்தின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் செய்வதுதான், ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்வது. இப்படி நாம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்கிறபோது, நமக்குள்ளாக முதிர்ச்சி, பக்குவம், தெளிந்த மனநிலை உருவாகிறது. அதைத்தான் இன்றைய திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவற்றை வரிசையாகப் பட்டியலிடுகிறது. அவை என்ன? தீமையான செய்திகள் அச்சுறுத்தாமை, உறுதியான இதயம், அச்சமில்லாமை என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நம்முடைய வாழ்வில், நாம் கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கிறபோது, நிச்சயம் இந்த முதிர்ச்சியான மனநிலையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நம்முடைய வாழ்வில் நமக்கு நெருக்கமாக இருப்பவர் யார்? நம்முடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய நம்பிக்கைக்குரியவர் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய பதில், “கடவுள்” என்றால், நிச்சயம், இந்த முதிர்ச்சியான மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.