மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்

திருப்பாடல் 115: 1 – 2, 3 – 4, 15 – 16

இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நமது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், நமது பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்கிறது. இந்த உலகத்தில் மன்னராட்சி முறை வழக்கில் இருந்தபோது, அரசர்கள் நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அது எதற்காக? தங்கள் வலிமை நிலைநாட்டப்பட வேண்டும். தங்களது பெயர் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வளவுக்கு நமது பெயரை நிலைநாட்ட முயற்சி செய்கிற நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். அதுதான் நமக்கு இந்த வாழ்வை வழங்கிய கடவுளின் திருப்பெயர். கடவுள் தான் நமக்கு எல்லாமே. கடவுள் இல்லையென்றால் இந்த வாழ்க்கை இல்லை, சாதனை இல்லை என்கிற உண்மை, நம்மில் பலருக்கு புரிவதும் இல்லை. புரிந்தாலும் அதனை வாழ்வாக்குவது கடினமாக இருக்கிறது. எப்போதுமே ”நான்” என்கிற சிந்தனை நமக்குள்ளாக உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதுதான் கடவுளுக்கும் நமக்குமான உறவை சிதைப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. கடவுளுக்குத்தான் எல்லா மாட்சியும் உரித்தாக்கப்பட வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் உரக்கச் சொல்கிறது.

கடவுளின் வழிகாட்டுதலை, அவர் நமக்கு காட்டி வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் நாம் உணர்ந்து, நமது மனித நிலையை உணர்வோம். கடவுள் இல்லையென்றால், நிச்சயம் நம்மால் எதுவும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்கிற, அந்த தாழ்ச்சியுள்ள மனநிலையை ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.