புனித தோமா – திருத்தூதர் விழா

எசாயா 52: 7 – 10
இறைவன் அருளும் மீட்பு

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கோபக்கனலை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். பாபிலோனில் கைதிகளாக, தங்கள் நாட்டை இழந்து, ஆலயத்தை இழந்து, புனித எருசலேம் நகரை இழந்து, விழா கொண்டாட முடியாமல், துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். செய்த பாவங்களுக்கு கடவுளின் பார்வையில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவங்களுக்கான தண்டனை பெற்றபின் வாழ்வு நிச்சயம் உண்டு என்பதையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளிடம் பேசுவதற்கான தகுதியைக் கூட அவர்கள் இழந்துவிட்டதாகவே எண்ணினார்கள். கடவுளை வான் நோக்கி பார்க்கவும் துணிவு அற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் செய்த பாவங்கள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களுக்கு மீட்புச் செய்தியை இறைவாக்கினர் எசாயா அவர்களுக்கு வழங்குகிறார்.

சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள், கைதிகளாக அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள், புதிய நாளுக்கு தயாராகும்படி, இறைவாக்கினர் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், குறிப்பாக, எருசலேம் தேவாலயத்தில் கொள்ளைப்பொருட்களாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதப்பொருட்களோடு அவர்கள் தயாராகும்படி, அழைப்புவிடுக்கப்படுகிறது. பாபிலோனியர்கள் ஏற்கெனவே, மீட்பின் வரலாற்றில் தோற்கடிக்கப்பட்ட எகிப்தியர்களைப் போல, அசீரியர்களைப் போல தோற்கடிக்கப்படுவார்கள். எனவே, மக்கள் கடவுள் அருளவிருக்கிற மீட்பை எண்ணிப்பார்த்து, ஆயத்தமாக இருக்கும்படி, இறைவாக்கினர் அழைப்புவிடுக்கின்றார்.

இறைவன் முன்னிலையில் நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு. தண்டனை என்று சொல்வதை விட, நாம் திருந்துவதற்கான வாய்ப்பு உண்டு. நாம் எப்படி திருந்த விரும்புகிறோம் என்பதை, நாம் தான் முடிவு செய்ய இருக்கிறோம். இறைவன் நாம் திருந்துவதற்கு வாய்ப்பு வழங்குகிறார். அதனைப் பயன்படுத்தி, நம்முடைய வாழ்வை நாம் மாற்றிக் கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.