பாராட்டைப் பெறுவோம்

“பெண்ணிடம் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்னும் பாராட்டை இயேசு வழங்குகிறார். அவரது இடத்தை நம்மில் யாரும் பெற முடியாது. ஆனால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற வேண்டும் என்பது இயேசு உணர்த்தும் பாடம். திருமுழுக்கு யோவானின் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கினால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

திருமுழுக்கு யோவான் ஒரு பாலை நில மனிதர். உடலும் உள்ளமும் உறுதி உடையவர். வசதியை தேடி வாழ்ந்தவர் அல்ல. அவர் பாலைவனக் குரல். ஒலித்துக்கொண்டும் எதிரொலித்துக்கொண்டும் இருப்பார். பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாதவர். உண்மையை உறக்க உறைப்பவர். அதே வேளையில் உண்மையை, எதார்த்தத்தை எளிய மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனத்தாழ்மை உடையவர்.

யோவானின் இந்த வாழ்க்கை, அவரது அதிரடி முழக்கம் அனைத்து மக்களையும் கவர்ந்தது.(லூக் 3’10-14) ஆகவே அவரைத் தேடி பாலைவனம் சென்றனர். இயேசுவும் அவரைத் தேடிச் சென்றார். அவரை இறைவாக்கினருள் மேலானவராகக் கண்டார். இறைவன் வரும் பாதையை ஆயத்தம் செய்யும் தொண்டனாகக் கண்டார். எனவே பெண்ணிடம் பிறந்தவருள் பெரியவராகக் காண்கிறார்.

நாம் ஒவ்வொருவரும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களைப் பெற்று இயேசுவின் பாராட்டைப் பெற வேண்டும். இயேசுவின் பிறப்புக்காகத் தயார் செய்யும் இக் காலத்தில் அவர் வரும் பாதையை தயார் செய்யும் தொண்டனாவோம்.

–அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.