பரிவுள்ளவர்களாய்!

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய பிரத்தெல்லி தூத்தி என்னும் சமூக சுற்றுமடலில் (அனைவரும் உடன்பிறந்தோர்) பரிவு பற்றி அதிகமாகப் பேசுகின்றார். ஏனென்றால் பரிவு இருக்கின்ற இடத்தில் தான் பாசம் இருக்கும். இது வெறும் உணர்வாக அல்லது உணர்ச்சியாக இருக்கக்கூடாது. மாறாக வாழ்வாக மாற வேண்டும். அதனால் தான் மாணிக்கவாசகர் ‘பரிவு கொள்ளும் இறைவனாக’ கடவுளை வர்ணிக்கின்றார். காரணம் என்னவென்றால் இயேசு செய்த புதுமைகள் ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கக்கூடியதாக இருக்கட்டும் அல்லது கானாவூர் திருமண புதுமையாக இருக்கட்டும், அது பரிவின் அடிப்படையில் தான் அரங்கேற்றப்படுகிறது.

அந்த அடிப்படையில் தான் இன்றைய நற்செய்தி வாசகமும் அமைந்துள்ளது. தொழுநோயாளி மீது இயேசு பரிவு கொள்கின்றார். காரணம் என்னவென்றால் மோசேயின் சட்டப்படி தொழுநோயாளி ஊருக்கு வெளியே தான் வாழ வேண்டும். மருத்துவர்கள் கூற்றுப்படி தொழுநோயாளியின் புண்கள் நாற்றமெடுக்கும், நிறம் மாறும். அதுமட்டுமில்லாமல் அது உணரக்கூடிய தன்மையை இழக்கும். இத்தகைய ஒரு காரணத்தினால் தான் ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு சூழல். அது மட்டுமில்லாமல் இது எளிதில் பரவக்கூடியது. அன்றைய சூழலில் இதனை தடுப்பதற்கோ அல்லது குணப்படுத்தவோ மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே உறவினர்கள் தானாகவே இவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு நிலை. அதுமட்டுமில்லாமல் இவன் செய்த குற்றத்திற்கு தண்டனையாக கடவுள் கொடுத்த வரம் என்று புறந்தள்ளினர். இதனையெல்லாம் இயேசு உணர்ந்து தான் அவன் மீது பரிவு கொண்டு அவனுக்கு புதுவாழ்வு கொடுக்கின்றார். இயேசுவின் பரிவு பாசமாக வெளிப்படுகின்றது.

நம்மிடம் இத்தகைய பரிவு இருக்கிறதா? குணப்படுத்த முடியாத நோய், ஏழ்மை, ஒதுக்கப்பட்டவர்கள் மீது நாம் பரிவு கொள்கிறோமா? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறோமா? சிந்திப்போம், பரிவுள்ளவர்களாக மாறுவோம்.

– அருட்பணி. பிரதாப்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.