நீதிமான்களே! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்

தானியேல் 1: 59 – 60, 61 – 62, 63 – 64

மண்ணகத்தில் இருக்கிறவர்களைப் போற்றிப் புகழ இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள், இறைவன் அதிகமாக அன்பு செய்யக்கூடியவர்களுக்கு இந்த அழைப்பானது விடுக்கப்படுகிறது. ஆண்டவரின் குருக்கள், இறைவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள், நீதிமான்கள், தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியிலும் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டவர்கள் தான், இந்த பாடலில் சொல்லப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் தான், அவர்களுக்கு உரிமைச்சொத்து. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனோடு ஒன்றித்திருக்கிறவர்கள் இவர்களே. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறபோது, இந்த உலகத்தில் இருக்கிற பலரும் இறைவனின் வல்ல செயல்களை உணர்ந்து கொள்வார்கள். எனவே, இறைவனுக்கு நெருக்கமானவர்கள், தங்களது வாழ்வில் எது நடந்தாலும் தொடர்ந்து இறைவனைப் போற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அவர்களும் இறைவனைப் போற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. எனவே, அவர்கள் இறைவனைப் போற்ற வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்கிறபோது, பல்வேறுவிதமான நெருக்கடியான நேரங்களை அனுபவிக்கலாம். ஆனால், அவற்றிற்கு மத்தியில் நாம் உறுதியாக வாழ்ந்து, இறைவனைப் போற்றுவோம். அது மற்றவர்களுக்கு சிறந்த சாட்சியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்காது.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.