நன்றியுணர்வு

1சாமுவேல் 1: 24 – 28

நன்றியுணர்வு என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான உணர்வுகளுள் ஒன்று. அது மனித இயல்பை உயர்த்திக் காட்டக்கூடிய பண்பாக விளங்குகிறது. ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகம், தேவையென்றால் பயன்படுத்தவும், பயன்படுத்தியபின் தூக்கியெறியும் நுகர்வுக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நுகர்வுக்கலாச்சாரம் நம்முடை ஆன்மீக வாழ்விலும் எதிரொலிப்பது வேதனையிலும் வேதனை. இறைவனிடமிருந்து நாம் ஏராளமானவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய தேவை முடிந்தவுடன், நாம் வேண்டியது பெற்றுக்கொண்டவுடன், கடவுளை உதறித்தள்ளி விடுகிறோம். இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், எப்படிப்பட்ட வாழ்வை தங்களின் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, இன்றைய முதல் வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு.

இறைவனின் முன்னிலையில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், மற்றவர்களின் ஏளனப்பேச்சுக்கு மத்தியிலும் நம்பிக்கை கொண்டிருந்த அன்னாவின் நேர்ச்சைக் கடன் பற்றிய நிகழ்வு நமக்கு இந்த வாசகத்தில் தரப்படுகிறது. எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. குழந்தை இல்லாத காரணத்தினால், பெனின்னா அன்னாவைத் துன்புறுத்துகிறாள். வேதனை தாளாமல் இறைவனிடத்தில் வேண்டுகிறாள், தன்னுடைய குறையை முறையிடுகிறாள். ஒருவேளை தனக்கு குழந்தை கிடைத்தால், அந்த குழந்தை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பதாக கூறுகிறாள். அதன்படியே, ஆண்டவரின் அருளால் சாமுவேல் என்கிற ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தன் இழிநிலை குழந்தையின் பிறப்பால் மறைந்து போனதும், இறைவனிடம் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை அவள் மறந்துவிடவில்லை. மாறாக, அதனை கருத்தாக நிறைவேற்றுகிறாள். பயத்தினால் அல்ல, மாறாக, அன்பின் மிகுதியினால் அதனை நிறைவேற்றுகிறாள்.

இறைவனுக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவருடைய பிள்ளைகளாக, அவருக்கு உண்மையுள்ளவர்களாக விளங்க வேண்டும். இறைவனின் அன்பை முழுமையாக உணர்கிறபோது, நிச்சயம் நாம் நன்றியுணர்வு மிக்கவர்களாக விளங்குவோம் என்பதில் சந்தேகமில்லை.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.