தாழ்ச்சி என்னும் உயர்ந்த மதிப்பீடு

விருந்து இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே விருந்தினர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் வரிசை முக்கியமான பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் அமரக்கூடியதாக இருப்பதை, நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட இடங்களில், நீங்கள் உங்களை முதன்மையானவராக நினைத்தாலும், நீங்கள் முன்வரிசையில் அமர வேண்டாம். அந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறவர் வந்து, உங்களை முன்னிலைப்படுத்துவதுதான் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று, இயேசு சொல்கிறார்.

கிரேக்கோ-உரோமை சமுதாயத்தில் விருந்து என்பது, ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்த ஒன்று. அதிகாரவர்க்கத்தினர், ஆளும்வர்க்கத்தினர், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்களுக்கு முதன்மையான இடமும், ஏழைகள், எளியவர்களுக்கு கடைசி இடமும் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஒரு விருந்து வீட்டில் நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு, பல ஒழுங்குகளும் வகுக்கப்பட்டிருந்தன. சீராக் 32: 11 ல் நாம் வாசிக்கிறோம்: ”விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு. கடைசி ஆளாய் இராதே. அலைந்து திரியாது வீட்டிற்குச் செல்”. இப்படிப்பட்ட ஒழுங்குகளும், ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்திருந்த சமுதாயப்பிண்ணனியில், இயேசுவின் வார்த்தைகள் நம்மை தாழ்ச்சிமிகுந்தவர்களாக வாழ அழைப்புவிடுக்கின்றன. முதன்மை இருக்கைகளும், முதன்மைப்படுத்துவதும் தான் உயர்ந்த மதிப்பீடு என்கிற சமுதாயத்தில், தாழ்ச்சியை உயர்ந்த மதிப்பீடாக இயேசு புகுத்துகிறார்.

நாம் வாழும் உலகமும் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இடமாகத்தான் இருந்து வருகிறது. தாழ்ச்சியை உயர்ந்த மதிப்பீடாக இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. தாழ்ச்சியை அடிமைத்தனமாகவும், கோழைத்தனமாகவும் கருதுகிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் தாழ்ச்சியை உயர்த்திப்பிடிக்கக்கூடியவர்களாக வாழ நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.