தவக்காலமே அடையாளம்

லூக் 11: 29 – 32

நாம் தவக்காலத்தை ஆரம்பித்து இன்றோடு ஒரு வாரம் ஆகின்றது. நம்மில் பல பேர் இந்த ஒரு வாரத்தில் பல வேண்டுதல்களோடும் கருத்துகளோடும் செபித்திருப்போம். சில புதுமைகளை அடையாளங்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு அடையாளங்கள் அரங்கேறியிருக்கும், சிலருக்கு ஏதும் நிகழாமல் இருந்திருக்கும். இன்று நம்மில் பலபேர் அடையாளங்களைத் தேடியும் புதுமைகளுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம். இயேசுவைக் காட்டிலும், போதகரின் மீது நம்பிக்கை வைத்து அலைந்தோடும் கூட்டம் தான் இன்றைய மிகப்பெரிய அவலநிலை. இப்படிப்பட்ட நமக்கு இன்றைய நற்செய்தி நல்லதொரு செய்தி.

முதலில் அடையாளம் என்பது என்ன என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அடையாளம் என்பது கண்ணுக்கு தெரிகின்ற ஒன்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது.

எ.கா:-
1. நாம் நம் திருப்பலியில் பயன்படுத்துகின்ற தூபம், நம் செபங்களும் இத்தூபத்தைப்போல ஆண்டவரை நோக்கி எழுப்பவேண்டும் என்பதன் அடையாளமே.

2. நற்கருணைப்பேழைக்கு அருகிலிருக்கும் அணையாத விளக்கு ஆண்டவர் கண்விழித்து நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே.

இந்த எண்ணத்தோடும் விவிலிய அறிவோடும் நாம் பார்க்கும்போது கண்டிப்பாக நாம் அடையாளங்களுக்காக அலைய மாட்டோம். மாறாக நம் அன்றாட வாழ்வில் அரங்கேருகின்ற ஒவ்வொன்றிலும் அவரின் புதுமையை, அவரின் வலக்கர வல்லமையைக் காண்போம். இக்காலத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய அடையாளம் இத்தவக்காலம். இந்த 40 நாளும் அவரின் அருள் நம்மை நிரப்பும் காலம். எவ்வாறு நினிவே மக்களுக்கு இறைவனின் அருளை யோனா எடுத்துச் சென்றாரோ, அதனைப் போல இத்தவக்காலம் அவரின் அருளை நம்மிடம் எடுத்து வரும் அடையாளமே. நினிவே மக்கள் எவ்வாறு யோனாவின் முறைமைகளுக்கும் வார்த்தைகளுக்கும் கீழ்படிந்தார்களோ அதனைப்போல நாமும் இத்தவக்காலத்தின் முறைமைகளுக்கு கீழ்படிந்து நம் வாழ்வினைக் காப்பாற்றுவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.