சொல்லுமில்லை, பேச்சுமில்லை

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4

இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை.

திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன.

நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய வாழ்வை பாராட்டிப்பேசட்டும். நாம் நம்மைப் புகழாமல், நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்களிடமிருந்து நமக்கு பாராட்டை பெற்றுத்தரட்டும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.