குணம் பெற விரும்புகிறீரா?

இயேசு உடல் நலமற்ற மனிதரிடம் ”குணம் பெற விரும்புகிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கிறார். பல ஆண்டுகளாக, எப்படியாவது குணம் பெற்று விட வேண்டும் என்று அந்த மனிதர் நிச்சயமாக முயற்சி எடுத்திருப்பார். எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் வெளிப்பாடுதான், அந்த குளத்தின் அருகில் அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பது. அந்த மனிதர் தனது உடல் நலக்குறைபாட்டிற்கேற்ப தனது வாழ்வை மாற்றிக்கொண்டாலும், இதுதான் வாழ்க்கை, இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

இயேசுவிடமிருந்து நிறைவான அருளைப்பெற்றுக்கொள்வதற்கு நமக்கு அடிப்படையிலே இருக்க வேண்டியது, ஆர்வம். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கை இழக்காத தன்மை. கடைசி நிமிடத்திலும் இருக்கும் அந்த ஒரு துளி நம்பிக்கை. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வம் அந்த மனிதருக்குள்ளாக இருக்கிறது. இயேசு அந்த ஆர்வத்திற்கு நம்பிக்கையூட்டுகிறார். அந்த ஆர்வத்தை அவர் ஊக்குவிக்கிறார். கடைசிவரை அதே ஆர்வத்தோடு இருக்கிறபோது, நிச்சயம் கடவுளின் அருள் நம்மை வந்தடையும் என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நமது நம்பிக்கை வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது, நம்பிக்கை. அந்த சிறுதுளி நம்பிக்கை தான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்கு தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நமது வாழ்வில் நாம் எப்போதும், நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.