கனி தரும் திராட்சைக் கொடி

திருப்பாடல் 128: 1b – 2, 3, 4, 5

திராட்சைக் கொடி வளமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த வளமையை, இல்லத்தின் தலைவிக்கு ஆசிரியர் ஒப்பிடுகிறார். யாரெல்லாம் ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் வளமையாக இருப்பர் என்பது இங்கே நமக்குத் தரப்படுகிற செய்தி. இந்த உவமை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிற உவமையாக இருந்தாலும், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய பிள்ளைகள் அனைவருக்குமே இது நன்கு பொருந்துவதாக அமைந்துள்ளது.

ஒரு குடும்பம் இறைவனால் முழுக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், அந்த குடும்பத்தில் இருக்கிற தலைவர், தலைவி, குழந்தைகள் என அனைவரும் இறைவனின் முழுமையான பராமரிப்பைப் பெற வேண்டுமென்றால், அவர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்போது ஆண்டவர் தம் பார்வையில் அவர்கள் விலைமதிக்க முடியாதவர்களாக இருப்பர். வாழ்நாள் முழுவதும் எந்தவொரு தீங்கும் அவர்களை நெருங்காதிருக்கும். வாழ்வின் நிறைவை அவர்கள் எப்போதும் அனுபவிக்கக்கூடிய வகையில், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.

நம்முடைய குடும்பங்கள் இறைவனின் அருளையும், ஆசீரையும் பெற்ற குடும்பங்களாக இருக்க வேண்டுமென்றால், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய குடும்பங்களாக இருக்க வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்வு, இறைவனின் முழுமையான ஆசீர்வாதத்தை நமக்குத் தரக்கூடிய வாழ்வாக இருக்கும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.