என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்

தவறான வாழ்க்கை, செய்யக்கூடாத தவறுகளை கடவுள் போக்கினார் என்று ஆசிரியர் கூறுகிறார். கடவுள் நீதியுள்ளவர் என்று சொல்கிறோமே? நீதியுள்ளவர் என்றால் ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? எப்படி செய்த தவறுகளை போக்க முடியும்? கடவுள் எந்த ஒரு ஆன்மாவும் தவறான வழிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் மீட்கப்பட வேண்டும் என்று சிரத்தை எடுக்கிறவர். அதனுடைய ஒரு அடையாளம் தான், மற்றவர்களின் குற்றங்களைப் போக்குவது.

கடவுளிடம் நமது தீய செயல்களை ஒளிவு மறைவின்றி, உண்மையான மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறபோது, மனமிரங்கி மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். தாவீது அரசர் செய்த தவறு அனைவருக்குமே தெரியும். ஒரு அரசராக இருக்கிறவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது தவறைச்செய்கிறார். யாரும் அறியவில்லை என்கிற மமதையோடு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறை கடவுள் அறிவார் என்று இறைவாக்கினரால் உணர்த்தப்பட்டபோது, தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிட்டதே என்று அவர் கோபப்படவில்லை. மாறாக, தன்னுடைய தவறை ஒப்புக்கொள்கிறார். இப்படிப்பட்ட தவறைச் செய்துவிட்டேனே என்று ஆதங்கப்படுகிறார். கடவுளிடத்தில் அழுது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்கிறார். அந்த அனுபவம் தான், தான் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட இரக்கம் தான், இங்கே பாடலாக (திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7) வெளிப்படுகிறது.

நமது வாழ்விலும் கடவுள் நம் மேல் அதிக அன்பு உள்ளவராக இருக்கிறார். எப்போதும் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த கடவுளின் பிள்ளைகளாக வாழ்வதற்கு, உண்மையான மனவருத்தம், மனமாற்றம் நமக்கு தேவை. அந்த மனமாற்றத்தோடு ஆண்டவரை நாடி வருவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.