இறைவன் நம் தலைவர்

இன்றைய நற்செய்தியில் வரிசையாக தங்களுடைய பலவீனங்களை, சீடர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்கிற அதிகாரப்போதை, அவர்களிடையே வாக்குவாதத்தையும், சண்டையையும் ஏற்படுத்துகிறது. அதனைத்தொடர்ந்து, அடுத்தவரைப்பற்றிய இழிவான எண்ணம், குற்றம் கண்டுபிடிக்கிற மனப்பான்மை சீடர்களின் மனதை ஆள்வதாக அமைவதை, நாம் பார்க்கலாம். இதுபோன்ற பல நிகழ்வுகளை நாமும் கூட, நமது வாழ்வில் சந்தித்திருக்கலாம். இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன? என்பதற்கு, இயேசுவின் நற்செய்தி சிறந்த பதிலாக அமைகிறது.

கடவுளை நம் முழுமுதற்தலைவனாக ஏற்றுக்கொள்வதுதான், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியாக இருக்கிறது. கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறபோது, நமக்குள்ளாக இருக்கிற பிணக்குகள் அகன்று, நமக்குள்ளாக இருக்கிற வேறுபாடுகள் அற்றுப் போகிறது. அந்த தருணத்தில் நமக்குள்ளாக தெளிந்த சிந்தனை தோன்றுகிறது. அந்த சிந்தனைகள் தாம், நம்மை கடவுள் முன்னிலையிலும், மற்றவர்கள் முன்னிலையிலும் பணிந்து நடக்கச்செய்வதாக அமைகிறது. ஆக, கடவுளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை, நாம் வாயால் அறிக்கையிட்டால் போதாது. நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? இல்லையா? என்பதை, நமது வாழ்வு தான் அறிக்கையிடுகிறது.

கடவுளை நாம் ஏற்றுக்கொள்வதற்கு நம்மையே நாம் பக்குவப்படுத்த வேண்டும். இறைவார்த்தையை வாசிக்க வேண்டும். வழிபாடுகளில் ஈடுபாட்டோடு பங்கெடுக்க வேண்டும். சக மனிதர்களுக்கு மதிப்பு கொடுத்து வாழ வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் தான், நம்மை கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.