இறைவன் நம்மோடு இருக்கிறார்

திருத்தூதர் பணி 18: 9 – 18

கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற ஆழமான செய்தியை, இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது. கடவுளின் பணி என்ன? நன்மை செய்வது கடவுளின் பணி. ஏனென்றால், கடவுள் நன்மையே உருவானவர். அப்படி நன்மை செய்கிறபோது, நிச்சயம் தீமையின் மொத்த உருவமாக இருக்கிற அலகை, நமக்கு பல சோதனைகளைத் தருவதற்கு தனக்கு சாதகமாக இருக்கிறவர்களை வைத்து, நம்மை பயமுறுத்தும். அப்படிப்பட்ட தருணத்தில், ஆண்டவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.

பவுல் கொரிந்து நகரில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தபோது, அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் யூதர்களிடமிருந்து வரத் தொடங்கியது. அதற்கு முன்னரே, ஆண்டவர் காட்சியில் பவுலுக்கு தோன்றி, உறுதியாகவும், துணிவோடும் இருக்குமாறு பணிக்கிறார். கடவுளைப் பணியைச் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பலவிதமான போராட்டங்களும், நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வுதான், கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வு. இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கூட, ஆண்டவரின் திருவுளப்படி வாழ்ந்தார். அவரும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், துணிவோடு இருந்தார். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தார். இறைவனின் ஆவி தன்னுள்ளாக இருந்தததை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். எனவே தான், அவரால் தீமையை துணிவோடு எதிர்க்க முடிந்தது. அத்தகைய நம்பிக்கையை வைக்குமாறு, ஆண்டவர் பவுலை உறுதிப்படுத்துகிறார்.

தீமைக்கு எதிரான போராட்டம் சாதாரணமானது அல்ல. இன்றைக்கு நம்மில் எத்தனையோ பேர் மக்கள் நலனுக்காக தங்களது ஆடம்பர வாழ்வைத்துறந்து, நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரவர்க்கம் மக்களைச் சிந்திக்க விடாது, அவர்களை அடக்குமுறையால் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவர்களுக்கு துணைநிற்க வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.