இறைவனின் தோழமை

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவருடைய பாலைவன அனுபவம் முக்கியமான மைல்கல். திருமுழுக்கு மாட்சியால் நிறைந்திருந்த இயேசு, அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்னதாகவே சோதிக்கப்படுகிறார். எந்த ஆவி அவர் மீது இறங்கி வந்ததோ, அதே ஆவி, அவரை பாலைவன அனுபவத்திற்காக அழைத்துச் செல்கிறது. வாழ்வில் சோதனைகளையோ, சோகங்களையோ யாரும் இல்லாமல் வாழ முடியாது. இவை வாழ்வின் அங்கம். இயேசுவும், கடவுளின் மகன் என்றாலும், அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த சோதனையில் நாம் கண்டு வியக்கக்கூடியதும், மகிழக்கூடியதுமான ஒரு செய்தி இருக்கிறது. அதுதான் வானதூதர்களின் பணிவிடை. இயேசு சோதிக்கப்படுவதற்காக பாலைவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, சோதனை முடிந்தவுடன், வானதூதர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்கின்றனர். நமது சோதனையில் கடவுள் தவிக்க விட்டுவிடுவது கிடையாது. அவர் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னம் நம் மத்தியில் இருக்கிறது. சோதனையிலிருந்து விடுபடுவதற்கு, சோதனையை வெல்வதற்கு அவர் எப்போதும் உதவி செய்கிறார். அவருடைய தூதுவர்களை அனுப்பி, நம்மை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

கடவுள் எப்போதும் நம்மை வெறுமனே விட்டுவிடுவதில்லை. அவர் இன்பத்திலும், துன்பத்திலும் நம்மோடு எந்நாளும் இருக்கிறார். அவருடைய அன்பிற்கு ஈடு இணை கிடையாது. அவரது பிரசன்னம் எப்போதும் நம்மை ஆட்கொள்வதாக இருக்கும். அதுதான் கடவுளின் அன்பு. அதுதான் கடவுளின் இரக்கம். அதுதான் அளவற்ற இறைவனின் பாசம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.