இறைவனின் அன்பு

தொடக்கநூல் 2: 18 – 24

கடவுள் தான் எல்லா படைப்புக்களுக்கும் ஊற்றாக இருக்கிறார் என்கிற ஆழமான சிந்தனையை இந்த பகுதி நமக்கு வழங்குகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் படைத்த இறைவன், தன்னுடைய படைப்பின் இறுதியில், மனிதர்களைப் படைக்கிறார். அவர்களை தன்னுடைய சாயலில் படைக்கிறார். தன்னுடைய உருவத்தில் படைக்கிறார். மனிதர்களைப் படைத்தது, இறைவனின் படைப்பில் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். எதற்காக?

கடவுள் ஒரே கடவுளாக இருந்தாலும், மூன்று ஆட்களாக இருக்கிறார். இந்த மூன்று பேரும், அன்பில் இணைந்திருக்கிறார்கள். அன்பின் வடிவமாக இருக்கிறார்கள். இந்த அன்பிலிருந்து பிறந்தவர்கள் தான், மனிதர்கள் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஆக, மனிதன் அன்பிலிருந்து உருவாகிறான். அந்த அன்பு தான், அவனுடைய இயல்பாக இருக்கிறது. ஒருவேளை, ஒரு மனிதனிடம் அன்பு குறைந்து விட்டது என்றால், அவன் அந்த இயல்பிலிருந்து விலகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும், அந்த இயல்பிலே வளர வேண்டும். இறைவனின் அன்பினில் பிறந்த நாம், அந்த இயல்பிலிருந்து விலகி விடக்கூடாது. அந்த இயல்பை மாற்றுகின்ற எதிலும் நாம் ஈடுபடக்கூடாது.

அன்பிலே உருவான நாம், அன்பு என்கிற பண்பில் தான், நாம் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம். நம்முடைய அன்பிலிருந்து உருவாகிறவர்கள் தான், நம்முடைய குழந்தைகள். அந்த குழந்தைகள் அன்பில் இயல்பில் வளரவும், அவர்களை அந்த அன்பில் வளர்த்தெடுக்கவும் நாம் முயல வேண்டும். அது தான் நம்முடைய கிறிஸ்தவ கடமையாகும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.