இயேசுவே உண்மையான வாயில்

”ஆடுகளுக்கு வாயில் நானே” என்று இயேசு சொல்கிறார். முற்காலத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுவான் ஆட்டுக் கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பகலில் மேய்ந்தபிறகு மாலையில் ஒட்டு மொத்த ஆடுகளும் ஒரே கொட்டிலில் அடைக்கப்பட்டன. அந்த கொட்டில் பாதுகாப்பான கதவினால் அடைக்கப்பட்டிருந்தது. கொட்டிலைப் பாதுகாக்கக்கூடிய ஆயனிடம் மட்டும் தான், அதற்கான திறவுகோல் இருந்தது. அவர் மட்டும் தான் வாயில் வழியாக நுழைய முடியும். இதைத்தான் 2வது மற்றும் 3வது இறைவார்த்தை சொல்கிறது: ”வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும்”.

ஆடுகளை கோடைக்காலத்தில் மலைப்பகுதியில் மேய்க்கச் செல்கிறபோது, ஒவ்வொரு நாளும் திரும்பி வருவது கடினம். எனவே, மலைப்பகுதியில் கொட்டிலை அமைப்பர். இது ஊரில் அமைப்பது போல பாதுகாப்பானது அல்ல. திறந்தவெளியில் கொட்டிலை அடைத்திருப்பர். ஆடுகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரு சிறிய வழியை ஏற்படுத்தியிருப்பர். இரவு நேரங்களில் ஆயனே அந்த வழியில் படுத்திருப்பார். அவரைத்தாண்டி, ஆடுகள் வெளியே செல்லாது. இங்கு ஆயனே வழியாக இருக்கிறார், என்கிற இந்த உருவகத்தைத்தான் இயேசு இங்கே சொல்கிறார். அதாவது இயேசு காவலாகவும் இருக்கிறார், தந்தையை அடைவதற்கான வழியாகவும் இருக்கிறார் என்பது இதன் பொருள்

நாம் அனைவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மந்தைக்கு காவலாகவும் இருக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கடவுளை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இயேசுவைப்போல மக்களின் மீட்பிற்கான வழியைக் காட்டுகிறவர்களாக வாழ வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.