இயேசுவின் போதனை

இயேசுவின் போதனை மக்களுக்கு ஏற்ற எளிய போதனையாக இருந்தது என்பது நமக்குத் தெரியும். இதுவரை தொழுகைக்கூடத்தில் போதித்துக்கொண்டிருந்தவர், இப்போது ஏரிக்கரைக்கு மாற்றியிருக்கிறார். அதற்கேற்ப, தனது போதனையின் வழிமுறைகளையும் மாற்றுகிறார். தொழுகைக்கூடத்தில் போதிப்பது எளிதானது. ஏனெ்றால், எப்படியும் மக்கள் கண்டிப்பாக வருவார்கள். நாம் சொல்வதைக் கேட்பார்கள். வழிபாடு முடியும் வரை, பிடிக்கிறதோ, இல்லையோ, புரிகிறதோ, இல்லையோ, அங்கே கடைசிவரை அமர்ந்திருப்பார்கள். ஆனால், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது என்பது சவாலானது.

தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள்கூட்டம் கட்டாயத்தின் பேரில் வரக்கூடியது. இங்கே கட்டாயம் கிடையாது. அப்படியே ஆசையில் வந்தாலும், கடைசிவரை அமர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. பிடித்திருந்தால் அமர்ந்திருக்கலாம். அல்லது சென்றுவிடலாம். இப்படிப்பட்ட சவாலான பணிதான், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது. எனவே, இயேசு தனது வழிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவருகிறார். மக்களின் வாழ்வில் தொடர்புடையவற்றை வைத்து, கடினமான இறையாட்சி தத்துவங்களை விளக்க முயல்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

இன்றைய மறையுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இயேசுவின் பாணி, அருமையான எடுத்துக்காட்டு. இன்றைக்கு மறையுரைகளைப் பற்றி மிகப்பெரிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கதைகள் சொல்ல வேண்டுமா? நிகழ்வுகள் சொல்லலாமா? இறைவார்த்தை மட்டும் தான் சொல்ல வேண்டுமா? இயேசுவின் போதனை நமக்கு கற்றுத்தரும் செய்தி: இறையாட்சி தத்துவங்கள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். கேட்கக்கூடிய மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு, அவர்களின் புரிதலுக்கு ஏற்றவாறு, நமது மறையுரைகளை போதிக்க வேண்டும். அப்படிப்பட்ட போதனை நிச்சயம் நல்ல பலனைத்தரும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.