இயேசுவின் சாயல்

(மத்தேயு – 25 : 31-46)

இன்றைய நற்செய்தி பல்வேறு கருத்துகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நான் உங்களோடு இரண்டு விடயங்களை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன். காரணம் இந்த தவக்காலம் நம்மிடையே இவ்விரண்டு மனமாற்றத்தை அழுத்தி எடுத்துரைக்கின்றது.

1. ‘எவரோ’ என்பதைவிட ‘இயேசுவே’ என்ற மனநிலை: நாம் ஒருவருக்கு உதவ முன்வந்தால் கூட நம்மில் சில சந்தேகங்கள் எழும். இவருக்குக் கண்டிப்பாக உதவ வேண்டுமா? இவர் உண்மையிலேயே துன்பத்தில் இருக்கிறாரா? இல்லை நம்மிடம் வந்து நடிக்கிறாரா? என்பது போன்ற பல கேள்விகள் எழும். இதனால் நாம் பலமுறை உதவி செய்ய முடிந்தும், உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தும் உதவி செய்யாமல் விட்டிருப்போம். ஆனால் இந்த நேரங்களில் நாம் வேறு எதையும் பார்க்காமல், சிந்திக்காமல், நமது உதவிக்காகத் தேவையோடு காத்திருப்பவரை ‘எவரோ’ என்று பார்க்காமல் அவரில் இயேசுவை மட்டும் கண்டோமெனில் உடனடியாக உதவி செய்ய முடியும்.

2. ‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்பொழுதே’ என்ற மனநிலை: நற்செய்தியில் வலப்பக்கத்தில் உள்ளோரும் இடப்பக்கத்தில் உள்ளோரும் கேட்கும் ஒரே கேள்வி, ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்தோம்? அல்லது தொண்டு செய்யாதிருந்தோம்? என்பதுதான். இருவருமே ‘இப்பொழுது’ என்ற மனநிலையோடு உதவியிருந்தால் ‘எப்பொழுது’ என்ற கேள்விக்கே இடம் இருந்திருக்காது.

கடந்துவிட்ட நிமிடம், தவறவிட்ட வாய்ப்பு, வாய் தவறிய சொல் இம்மூன்றும் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு வாய்ப்பிலும் தேவையில் இருக்கும் ஒவ்வொரு மனிதரிலும் இயேசுவின் சாயலைக் கண்டு நாம் செயல்பட்டால் எத்தீங்கும் நம்மை அணுகாது. எனவே இத்தவக்காலத்தினை வாய்ப்பாகக் கருதி செயல்படுவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.