இன்றைய சீடர்களான நாம் எப்படி?

மாற்கு 9 : 30 – 37
இன்றைய சீடர்களான நாம் எப்படி?

தம் இறப்பின் வழியே நமக்கு வாழ்வளிக்க வந்த இறைமகன் இரண்டாம் முறையாகத் தன் பாடுகள்- மரணம்- உயிர்ப்புப்பற்றி பேசுகிறார். அவமான சின்னத்தை தூக்கிச் சென்று அதில் அறையப்பட்டு இறக்க அவர் மனம் வருந்தவில்லை. அதை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டே தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டார். முதல்முறையாக தம் இறப்பினை அறிவிக்கும் பொழுது மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படுவார் என்ற குறிப்பு உள்ளது. இங்கோ, ‘மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார்’ என்ற கூடுதலான அறிவிப்பை இன்றைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது. யூதாசின் துரோகச் செயலை மேலோட்டமாக இங்கே ஆண்டவர் குறிப்பிடுகிறார். மேலும் இறைவனின் திட்டத்தில் மனித மீட்புக்காகக் கடவுளாலும் அவர் கையளிக்கப்படுவார் என்ற உண்மையும் இங்கு தொனிக்கிறது. “நம் குற்றங்களுக்காக சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” (உரோ 4:35)

உரோமைய ஏகாதிபத்தியத்தை முறியடித்து மீண்டும் இஸ்ரயேலின் அரசை மிக வலிமையாக மெசியா நிறுவுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு, இவர் பணி செய்ய வந்ததாகவும் பலியாகப்போவதாகவும் கூறியது சீடர்களுக்கு புறியாத புதிர்.எனவே அவர்கள் அவருடைய மரணம் பற்றி ஏதும் கவலைக் கொள்ளாமல், வரவிருக்கின்ற மெசியாவின் ஆட்சியில் யார் பெரியவர்கள் என்று சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை கூர்ந்து கவனிக்கும் போது இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்குமிடையே முற்றிலுமான ஒரு புரிதலின்மை இருப்பது தெரிய வருகிறது. இது தான் இன்று நமக்கான பாடமாகவும் அமைகிறது. இயேசு துன்பத்தினை முன் வைத்து தன் இறப்பினைக் கூறும் பொழுது இவர்கள் மாட்சிமையை, மகிமையை, பெயரினை, புகழினை முன் வைத்து தன் வாழ்வினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தன்னை வெறுமையாக்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தன்னை எப்படியெல்லாம் அணி செய்து கொள்ள முடியும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் சிந்தனையெல்லாம் எப்படி பிறருக்காக தன்னை ‘அளிப்பது’ என்பதைப்பற்றி அறிவுறுத்தும் பொழுது, இவர்கள் பிறரை எப்படி தன் முன்னேற்றத்துக்காக ‘அழிப்பது’ என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இயேசுவின் சீடர்களான நாமும் இவ்வாறு தான் அவருடைய இறையரசுக் கனவுக்கெதிராக, ஒன்றுமே தொடர்பில்லாத காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அன்றைய சீடர்கள் இயேசு பக்கத்தில் இருக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு அவரிடம் கேட்க அஞ்சி தள்ளி வந்த பிறகு ஏதோ அவர்களின் பழைய வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள். இதோபோலதான் இன்று நாம் கோவிலுக்குள் இருக்கும்போது வானதூதர்களைப் போலவும், வெளியே வந்த பிறகு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் சண்டைப்போடும் பெண்களாகவும் மதுக்கடைகளிலிருந்து வெளிவரும் ஆண்களாகவும் மாறிவிடுகிறோம். அவரிடமே நம் வாழ்க்கைக்கான விளக்கம் கேட்போம். விளக்கம் கேட்க அஞ்சவேண்டாம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.