ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்…

திருப்பாடல் 124: 1ஆ – 3, 4 – 6, 7 – 8

நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களை நம்மோடு நாம் ஒப்பீடு செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமாக சிந்திப்பதற்கு அழைப்பதற்கான பாடலாக இருக்கிறது. ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்ததனால், அவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்தது. ஒருவேளை ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சிந்தனையாக தருகிறார்.

திருப்பாடலில் வருகிற சிந்தனையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையில் இல்லாமல், நம்மை விட கீழான நிலையில் உள்ளவர்கள் போல, நம்முடைய வாழ்வு அமைந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம்? ஆக, கடவுள் நம்மை பல மனிதர்களை விட சிறப்பான அன்பாலும், அருளாலும் நிரப்பியிருக்கிறார். நம்மை விட ஒரு படி கீழாக இருக்கிறவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் தான், நம்மால் கடவுளின் உண்மையான அன்பையும், அவர் நம்மீது வைத்திருக்கிற உண்மையான பாசத்தையும் உணர முடியும்.

கடவுள் நம் மீது வைத்திருக்கிற பாசத்தை, இந்த திருப்பாடல் நமக்கு நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அன்பை நாம் முழுமையாக உணர்வோம். அவருடைய திட்டப்படி, நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொண்டு, உன்னதமான வாழ்க்கை வாழ நாம் முயற்சி எடுப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.