ஆண்டவர் என் கற்பாறை

திருப்பாடல் 18: 1 – 2a, 2bc – 3, 46 – 50

இறைவனை பலவிதமான உருவகங்களில் இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கற்பாறை, கோட்டை, மீட்பர், மலை, கேடயம், அரண் என்று இந்த உருவகம் நீண்டு கொண்டே செல்கிறது. உருவகத்தின் மூலமாக ஆசிரியர் சொல்லக்கூடிய செய்தி என்ன? மேற்சொன்ன உருவகங்கள் அனைத்துமே, கடவுளைப் பற்றிச்சொல்லக்கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். கடவுள் பாதுகாப்பும், புகலிடமுமாய் இருக்கிறார் என்பதுதான் அது.

இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்து வந்த தருணங்களை இந்த பாடலானது எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, யாரையெல்லாம் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்திருந்தாரோ, அவர்கள் அனைவரையும் ஆண்டவர் காத்து வந்திருக்கிறார். குறிப்பாக, தாம் திருப்பொழிவு செய்த அனைவரோடும் ஆண்டவர் உடனிருந்திருக்கிறார். அவர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார். எதிரி நாட்டினரை வெற்றி கொள்ள முடியாது என்கிற நிலை இருந்தபோதிலும், ஆண்டவர் அவர்களை அற்புதமாக வழிநடத்திய, பாதுகாப்பு தருணங்களை இந்த பாடல் நினைவுகூர்கிறது.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நமக்கு பாதுகாப்பு கேடயமுமாய் இருக்கிறார். தீமைகளிலிருந்து, நமக்கு விடுதலை தரக்கூடியவராக, ஆபத்துக்களிலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியவராக இறைவன் இருக்கிறார். அந்த இறைவனின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து, இறைவனின் பிள்ளைகளாக வாழ்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.