ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது

லூக்கா 1: 47, 48 – 49, 50 – 53, 54 – 55

அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லப்பட்டவுடன் இந்த பாடல் அவருடைய நாவிலிருந்து எழுகிறது. இந்த பாடல், 1சாமுவேல் இரண்டாவது அதிகாரத்தில் அன்னாவினால் பாடப்படுகிற பாடல். அதுவே, அன்னை மரியாள் பாடுகிற பாடலாக நமக்குத்தரப்படுகிறது. அன்னை மரியாள் ஆண்டவரை போற்றுகிறார். எதற்காக அன்னை மரியாள் கடவுளைப் போற்ற வேண்டும்? இரண்டு காரணங்களுக்கு அன்னை மரியாள் போற்றியிருக்க வேண்டும்.

முதலாவது, தன்னை கடவுளின் கருவியாகப் பயன்படுத்துவதற்கு, மீட்பின் திட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய பாக்கியத்திற்காக ஆண்டவரைப் போற்றியிருக்க வேண்டும். இரண்டாவது, தன்னுடை உறவினர் எலிசபெத்தம்மாளின் இழிநிலை கடவுள் போக்கியதற்காக ஆண்டவரைப் போற்றியிருக்க வேண்டும். ஏனெனில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத குறை எலிசபெத்தம்மாளுக்கு இருந்தது. அந்த குறை இப்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. சாபம் என்று நினைக்கப்பட்டதிலிருந்து, கடவுள் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதுவும் போற்றுதற்குரிய காரணம். இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய செய்தி, அன்னை மரியாள் தான் பெற்ற கொடைகளுக்காக மட்டும் கடவுளைப் போற்றவில்லை. மாறாக, மற்றவர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காகவும் இறைவனைப் போற்றுகிறார். நாம் போற்றுவது நமக்காக மட்டும் இருக்கத்தேவையில்லை. மற்றவர்களுக்காகவும் நாம் கடவுளைப் போற்றலாம். கடவுளுக்கு நன்றி செலுத்தலாம்.

நம்முடைய வாழ்வில் கடவுளைப் போற்றுவதற்கும் நேரத்தைச் செலவிட வேண்டும். அதிகமான மன்றாட்டுக்களை அல்ல, மாறாக, அதிகமான புகழ்ச்சிகளை நாம் கடவுளுக்கு காணிக்கையாக்க வேண்டும். அப்படிப்பட்ட புகழ்ச்சி நிறைந்த செப வாழ்வை, நாம் அன்னை மரியாளிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.