அனைத்து தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்

திருப்பாடல் 97: 1, 2b, 6, 7c, 9

கடவுள் ஒருவர் என்பது நமது நம்பிக்கை. ஆனால், இன்றைய திருப்பாடலில், பல தெய்வங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? இங்கே சொல்லப்படக்கூடிய தெய்வங்கள் யார்? இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், கடவுளைப்பற்றிய அவர்களது நம்பிக்கை இதுதான். அவர்கள் மற்ற தெய்வங்களை புறக்கணிப்பது கிடையாது. ஆனால், அவர்கள் “யாவே“ இறைவனை மட்டும் நம்பினார்கள். தங்களது யாவே இறைவன் தான், எல்லா தெய்வங்களுக்கும் தலைமையாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்த நாடுகள் அனைத்திலும், தங்களுக்கென்று ஒரு காவல் தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பாபிலோனியர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை வழிபட்டார்கள். அமலேக்கியர்களுக்கென்று ஒரு தெய்வம் இருந்தது. இவர்கள் அனைவருடைய வல்லமையும், அந்த நாட்டின் எல்கைக்குள்ளாக மட்டுமே இருப்பதாக, மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் ஒருவர் தான் எல்கைகளைக் கடந்து, வல்லமைமிக்கவர் என நம்பினார்கள். இப்படிப்பட்ட பிண்ணனியோடு இந்த திருப்பாடலை ஆசிரியர் எழுதுகிறார்.

இன்றைக்கு கடவுளிடமிருந்து பல அருட்கொடைகளைப் பெற்றிருக்கிறோம். ஆனாலும், நம் தேவையை நிறைவேற்றுவதற்காக, வெகு சாதாரணமாக, வேறு தெய்வங்களை நாடிச்செல்கிறோம். உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்து நிற்பதற்கு, நாம் உறுதி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.