Tagged: தமிழில்தேவ செய்தி

இயேசுவின் பிறப்பு தரும் செய்தி

இயேசுவைக் குழந்தையாக பார்த்த சிமியோன் இறைவாக்குரைக்கிறார். அவருடைய இறைவாக்கு என்ன? ”இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும்” என்கிற செய்தி அவரால் இறைவாக்காகச் சொல்லப்படுகிறது. யாருடைய எழுச்சி? யாருடைய வீழ்ச்சி? இதுவரை மக்களை சட்டங்களால், ஒழுங்குகளால் சிறைப்படுத்தியிருந்த அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து இயேசு விடுதலையைக் கொண்டு வர இருக்கிறார். இது அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கான வீழ்ச்சி. இனிமேல் அவர்கள் அடிமைப்படுத்த முடியாது. அதேபோல, ஏழைகள், எளியவர்கள், சட்டங்களினால் வீணாக சிறைப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் எழுச்சி. ஏனென்றால், அவர்களுக்கும் மீட்பு இருக்கிறது என்கிற செய்தி, மிகச்சிறப்பான செய்தி. இத்தகைய இறைவாக்கு தான், சிமியோனால் உரைக்கப்படுகிறது. இயேசுவின் பிறப்பு இந்த உலகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரிவரக் கொண்டு வர இருக்கிறது. அது சமத்துவத்தையும், சமநீதியையும் எதிர்பார்க்கிறவர்களின் வெற்றி. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்களின் வெற்றி. அந்த வெற்றி, இயேசுவின் பிறப்பினால், இந்த மண்ணில் மலரட்டும். ~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்