ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 6 – 7, 9 – 10, 11 – 12

ஏழைகள் சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்ட காலத்தில், கடவுள் ஏழைகளுக்கு செவிசாய்க்க மாட்டார் என்கிற சிந்தனை மக்கள் மனதில் நிலவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட சமுதாயத்தில், ஏழையின் மன்றாட்டு ஆண்டவர் செவிசாய்த்தார் என்பது, ஒரு ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை என்பதை இந்த திருப்பாடல் நமக்கு மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஏழைக்கு ஏன் ஆண்டவர் செவிசாய்த்தார்? கடவுள் முன்னிலையில் ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடு உண்டா? என்கிற கேள்விகள் நம் முன்னால் எழுகிறது. கடவுள் முன்னிலையில் எப்போதுமே ஏழை என்றோ, பணக்காரர் என்றோ பிரிவினை கிடையாது. கடவுள் முன்னிலையில், பொருளாதாரம் சார்ந்த வேறுபாடு கிடையாது. கடவுள் பொருளாதார அடிப்படையில் தீர்ப்பிடுவதும் கிடையாது. அப்படியென்றால், கடவுள் வழங்கும் தீர்ப்பின் அளவுகோல் என்ன? அதுதான் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வது. ஆண்டவருக்கு அஞ்சி வாழக்கூடிய எல்லாருமே கடவுளுக்கு பிரியமான பிள்ளைகள் தான். அவர்கள் ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும், கடவுளால் நேசிக்கப்படக்கூடியவர்கள். நம்முடைய வாழ்க்கை தான், நாம் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறோமா அல்லது தொலைவில் இருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது.

நாம் கடவுளுக்கு அருகாமையில் இருப்பதற்கு, அவருடைய கூடாரத்தில் தங்கி வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். கடவுளோடு இணைந்து வாழக்கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.