ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்

திருப்பாடல் 23: 1 – 2, 2 – 3, 5 – 6

உலகத்தில் வாழ்கிற மனிதர்கள் அனைவருமே நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், மருத்துவத்துறை மற்றும் அறிவியலின் அசுர வளர்ச்சி. நாம் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான எளிய முறையை திருப்பாடல் ஆசிரியர் நமக்குத் தருகிறார். அதாவது, ஆண்டவர் நம்முடைய ஆயராக இருக்கிறபோது, நாம் நீண்டநாட்கள் நிச்சயம் மகிழ்ச்சியோடு, நிறைவோடு வாழ முடியும் என்பது, ஆசிரியரின் நம்பிக்கையாக இருக்கிறது.

எப்படி நாம் நீண்ட நாட்கள் வாழ முடியும்? நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்களா? நமக்கு நோய், நொடிகள் வராதா? நம்மை எதிர்க்கிறவர்கள் இருக்க மாட்டார்களா? எதிர்ப்புக்கள் அனைத்துமே இருக்கும். ஆனால், ஆண்டவர் நம் சார்பில் இருந்து செயலாற்றுவார். ஆண்டவரை நம் ஆயராக ஏற்றுக்கொள்கிறபோது, இறைவன் நம்மை நலன்களால் நிரப்புகிறார். நம்முடைய பாத்திரம் நிரம்பி வழிகிற அளவுக்கு, கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தருகிறார். எதிரிகள் கண்முன்னே நாம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு வழிவகை செய்கிறார். நம்மை எதிர்த்தவர்கள் பொறாமைப்படுகிற அளவிற்கு விருந்தொன்றை ஏற்படுத்தித் தருகிறார். இந்த நலன்களையெல்லாம், நாம் அவரை ஆயராக ஏற்றுக்கொள்கிறபோது பெற்றுக்கொள்ளலாம்.

என்னுடைய வாழ்வில் ஆண்டவர் இருக்கிறாரா? அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேனா? அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறதா? என்று எண்ணிப்பார்ப்போம். ஆண்டவரை நம்முடைய ஆயராக ஏற்று, நீண்ட நாட்கள் வாழ்கிற கொடையைப் பெறுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.