Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)

அதிகாரம் 28

சீற்றம் ..............தொடர்ச்சி
1 பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.2 உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு: அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.3 மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்: அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?4 மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை: அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?5 அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?6 உன் முடிவை நினைத்துப்பார்: பகைமையை அகற்று: அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்: கட்டளைகளில் நிலைத்திரு.7 கட்டளைகளை நினைவில் கொள்: அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே: உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை: குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

பூசல்
8 பூசலைத் தவிர்த்திடு: உன் பாவங்கள் குறையும். சீற்றங்கொள்வோர் சண்டையை மூட்டிவிடுகின்றனர். 9 பாவிகள் நட்பைக் கலைக்கிறார்கள்: பிணக்கை விதைக்கிறார்கள். 10 விறகின் தன்மைக்கு ஏற்ப நெருப்பு பற்றியெரியும்: பூசலின் கடுமைக்கு ஏற்ப அது பற்றியெரியும். மனிதரின் வலிமையைப் பொறுத்து அவர்களின் சீற்றம் அமையும்: அவர்களின் செல்வத்தைப் பொறுத்து அவர்களது சினம் பெருகும். 11 திடீர் வாக்குவாதம் நெருப்பை மூட்டுகிறது: திடீர்ப் பூசல் கொலைக்கு இட்டுச் செல்கிறது. 12 ஊதும்போது தீப்பொறி கொழுந்துவிட்டு எரிகிறது: அதன்மீது துப்பும்போது அது அணைந்துபோகிறது: இந்த இரு விளைவுகளும் உன் வாயினின்றே புறப்படுகின்றன.

புறங்கூறுதல்
13 புறங்கூறுவோரையும் இரட்டை நாக்குக் கொண்டோரையும் சபி. அமைதியில் வாழ்ந்த பலரை அவர்கள் அழித்துவிட்டார்கள்.14 மூன்றாவது நாக்கு பலரை நிலைகுலையச் செய்தது: அவர்களை நாடுவிட்டு நாடு துரத்தியடித்தது: அரண் கொண்ட நகர்களைத் தகர்த்தெறிந்தது: பெரியோர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியது. மூன்றாவது நாக்கு என்றால்
'புறங்கூறுதல்' ஆகும்.
15 மூன்றாவது நாக்கு பற்றுள்ள மனைவியரையும் வெளியில் துரத்தியது: அவர்களுடைய உழைப்பின் பயனை இழக்கச் செய்தது.16 அதற்குச் செவிசாய்ப்பவர்கள் ஓய்வு கொள்ளமாட்டார்கள்: அமைதியிலும் வாழமாட்டார்கள்.17 சவுக்கடி தழும்பை உண்டாக்கும்: வாயடியோ எலும்பை முறிக்கும்.18 பலர் வாள்முனையில் மடிந்திருக்கின்றனர்: நாவால் மடிந்தோரே அவர்களை விட மிகுதியானோர்.19 மூன்றாவது நாக்கினின்று பாதுகாக்கப்பட்டோர் பேறுபெற்றோர்: அதன் சீற்றத்துக்கு ஆளாகாதோறும் அதன் நுகத்தைச் சுமக்காதோறும் அதன் சங்கிலிகளால் கட்டப்படாதோரும் பேறுபெற்றோர்.20 அதன் நுகம் இரும்பு நுகம்: அதன் சங்கிலிகள் வெண்கலச் சங்கிலிகள்.21 அதனால் விளையும் சாவு இழிந்த சாவு: அதனைவிடப் பாதாளம் மேலானது.22 இறைப்பற்றுள்ளோர்மீது அதற்கு ஆற்றலில்லை: அதன் தீப்பிழம்புகள் அவர்களை எரிப்பதில்லை.23 ஆண்டவரைவிட்டு விலகுவோர் அதற்குள் விழுகின்றனர்: அவர்களுக்குள் அது கொழுந்துவிட்டு எரியும்: அதை அணைக்க முடியாது. அது சிங்கத்தைப்போன்று அவர்கள் மீது கட்டவீழ்த்துவிடப்படும்: வேங்கையைப்போன்று அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.24 உன் உடைமைகளைச்சுற்றி முள் வேலியிடு: உன் வெள்ளியையும் பொன்னையையும் பூட்டிவை. 25 உன் சொற்களை நிறுத்துப் பார்க்கத் துலாக் கோலையும் எடைக்கற்களையும் செய்துகொள்: உன் வாய்க்குக் கதவு ஒன்று செய்து அதைத் தாழிடு.26 நாவால் தவறாதபடி எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், உனக்காய்ப் பதுங்கியிருப்போர்முன் நீ வீழ்ச்சியுறுவாய்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!