Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 71

முதியோரின் மன்றாட்டு
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். 5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். 7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம். 8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். 10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே; என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;11 "கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை" என்று அவர்கள் சொல்கின்றார்கள். 12 கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்! 14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. 16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். 18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும். 19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது; மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்; கடவுளே, உமக்கு நிகர் யார்? 20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர். 21 என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர். 22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். 24 என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!