Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 41

இஸ்ரயேலுக்கு ஆண்டவரின் உறுதிமொழி
1 தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்: மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக!2 சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக் கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்? மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது: அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது.3 அவன் அவர்களைத் துரத்திச் செல்கின்றான்: எதிர்ப்பு எதுவுமின்றி முன்னேறுகின்றான்: பாதை வழியே காலடி படாது செல்கின்றான்.4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!5 தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்: உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்: எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.6 ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்: தம் அடுத்தவரிடம், 'திடன்கொள்' என்கின்றார்.7 கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்: சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பதுபற்றி, நன்று என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்: அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.8 நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!9 உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்: தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்: நீ என் அடியவன்: நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்: உன்னை நான் தள்ளிவிடவில்லை என்று சொன்னேன்.10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்: உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்: ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்: உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.13 ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன் என்று உன்னிடம் சொல்பவரும் நானே.14 யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். 15 இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்: குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.16 அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்: புயல் அவற்றைச் சிதறடிக்கும்: ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்: இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.17 ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்: அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்: ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்: இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.18 பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்: பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்: பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.19 பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்: சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்: பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.20 அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்: ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்
21 உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்கிறார் ஆண்டவர். உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள் , என்கிறார் யாக்கோபின் அரசர்.22 அத்தெய்வங்கள் அருகில் வந்து, நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்: முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்: நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்: இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும்.23 நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்: நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம்.24 இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை! உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே! உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன் .25 நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்: அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்: அவன் என் பெயரைப் போற்றுவான்: ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான்.26 நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே இதை அறிவித்தவர் யார்? 'அது சரி' என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார்? அப்படி எதுவும் அறிவிக்கவில்லை: முன்னுரைக்கவில்லை: நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை.27 இதோ வருகிறார்கள் என்று முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே! நற்செய்தியாளரை எருசலேமுக்கு அனுப்பியதும் நானே!28 நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்: எதையும் காணவில்லை: அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை.29 இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!