Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 32

நீதியுள்ள அரசர்
1 இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்: தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்:2 ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கிடமாகவும் புயலுக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்தில் நீருள்ள கால்வாய் போலும் காய்ந்த மண்ணில் பெரும் குன்றின் நிழல் போலும் இருப்பர்.3 அப்பொழுது பார்வை உடையவரின் கண்கள் மறைக்கபட்டிரா. கேள்வியுடையவரின் செவிகள் அடைக்கப்பட்டிரா.4 பதறும் நெஞ்சங்கள் அறிவை உணர்ந்துகொள்ளும்: திக்குவாயரின் வாய் தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.5 மூடர் இனிச் சான்றோர் என அழைக்கப்படார்: கயவர் இனிப் பெரியோர் எனக்கருதப்படார்:6 ஏனெனில், மூடர் மடமையாய்ப் பேகுகின்றனர்: அவர்களின் மனம் தீமை செய்யத் திட்டமிடும்: அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித் தீச்செயல் செய்வதையே நாடும்: அவர்கள் ஆண்டவரைப்பற்றித் தவறாகவே பேசுவர்: பசித்தோரின் பசி போக்கமாட்டார்: தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.7 கயவரின் நயவஞ்சகச் செயல்கள் தீமையானவை: வறியோர் வழக்கில் நீதி இருப்பினும், வஞ்சக வார்த்தைகளால் ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை அவர்கள் திட்டமிடுகின்றனர்.8 சான்றோர் உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்: அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர்.

தண்டனைத் தீர்ப்பும் மீட்பும்
9 பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்: கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்.10 கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்: கனிகொய்யுங் காலம் இனி வராது.11 பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்: கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்: உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள்.12 செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.13 முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள்.14 அரண்மனை பாழடையுமாறு விடப்படும்: ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்: குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்: அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்: மந்தைகள் மேயும்.15 மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்: பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்: செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும்.16 நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்: நேர்மை வளமான வயல்களில் வாழும்.17 நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு: நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.18 என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.19 ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்: நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.20 நீர்வளமிக்க இடங்களில் எல்லாம் பயிர்செய்து தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும் நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!