Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு)

அதிகாரம் 7

பாடல் 21: கண்டோர் கூற்று; உரையாடல் ..............தொடர்ச்சி
1 அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!2 உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்: அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை: உன் வயிறு கோதுமை மணியின் குவியல்: லீலிகள் அதை வேலியிட்டுள்ளன. 3 உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை: கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.4 உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது: உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை: பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை: உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை: தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.5 உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது: உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது: அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.

பாடல் 22: தலைவன் கூற்று
6 அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!7 இந்த உன் வளர்த்தி பேரீச்சைக்கு நிகராகும்: உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும்.8 ஆம், பேரீச்சையின்மேல் நான் ஏறுவேன்: அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன் என்றேன்: உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல் மணம் கமழ்க!9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!

பாடல் 23: தலைவி கூற்று
10 நான் என் காதலர்க்குரியள்: அவர் நாட்டம் என்மேலே!11 என் காதலரே, வாரும்: வயல்வெளிக்குப் போவோம்: மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.12 வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்: திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்.13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது: இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது: புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!