Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)

அதிகாரம் 35

திருச்சட்டமும் பலிகளும்
1 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்: கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.2 அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப்பலி செலுத்துவதாகும்.3 தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது: அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.4 ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே: கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து.5 நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது.6 நீதிமான்களின் பலி ஏற்றுக்கொள்ளத்தக்கது: அதன் நினைவு என்றும் நீங்காது.7 ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து: உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.8 கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு: பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.9 உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு: உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு.10 ஆண்டவரே கைம்மாறு செய்பவர்: ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர்.

இறை நீதி
11 ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே: அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே.12 ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்: அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.13 அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்: தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். 14 கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.15 கைம்பெண்களின் கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிந்தோடுவதில்லையா? அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தவர்களுக்கு எதிராக அவர்களது அழுகுரல் எழுவதில்லையா?16 ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும்.17 தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்: அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை.18 உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை: அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்: தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.19 ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார்.20 இரக்கமற்றோரின் இடுப்பை அவர் முறித்துப் பிற இனத்தார்மீது பழி தீர்க்கும்வரை,21 இறுமாப்புக் கொண்டோரின் கூட்டத்தை அழித்து அநீதர்களின் செங்கோல்களை முறிக்கும்வரை,22 மனிதருக்கு அவரவர் செயல்பாட்டுக்கு ஏற்பக் கைம்மாறு செய்யும்வரை, அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் செயல்களுக்கு ஈடு செய்யும்வரை.23 தம் மக்களின் வழக்கில் அவர் நீதித் தீர்ப்பிட்டு அவர்களைத் தம் இரக்கத்தினால் மகிழ்விக்கும்வரை, அவர்களிடம் பொறுமை காட்டமாட்டார்.24 வறட்சிக் காலத்தில் தோன்றும் கார் முகில்போலத் துன்பக் காலத்தில் அவரின் இரக்கம் வரவேற்கத்தக்கது.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!