Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 106

கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை
1 அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? ஆவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? 3 நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்! 4 ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். 6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம். 7 எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை; உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை; மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில் கலகம் செய்தனர். "செங்கடல் ஓரத்தில்" என்பதற்குப் பதில்
"கடல் ஓரத்தில்" என்பது எபிரேய பாடம்.
விப 14:10-12
8 அவரோ தமது பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்; இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார். 9 அவர் செங்கடலை அதட்டினார்; அது உலர்ந்து போயிற்று; பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார். 10 எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்; பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார். 11 அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது; அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை. 12 அப்பொழுது, அவர்கள் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்; அவரைப் புகழ்ந்து பாடினார்கள். 106:9-12 <=> விப 14:21-31
106:12 <=> விப 15:1-12
13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. 14 பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். 15 அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்; அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார். 106:14-15 <=> எண் 11:4-34 16 பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள். 17 நிலம்பிளந்து தாத்தானை விழுங்கியது; அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது. 18 அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது; தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது. 106:16-18 <=> எண் 16:1-35 19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் 'மாட்சி'க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்; 21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். 23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். 106:19-23 <=> விப 32:1-14 24 அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்; அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை. 25 அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்; ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. 26 ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி 'நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்; 106:24-26 <=> எண் 14:1-35 27 உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும் அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்' என்றார். லேவி 26:33 28 பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்; 29 இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்; ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று. 30 பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால் கொள்ளைநோய் நீங்கிற்று. 31 இதனால், தலைமுறை தலைமுறையாக என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது. 106:28-31 <=> எண் 25:1-13 32 மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள். அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது. 33 மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார். 106:32-33 <=> எண் 20:2-13 34 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. 35 வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்; 36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. 106:34-36 <=> நீத 2:1; 3:5-6 37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்; 2 அர 17:7 38 மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்; கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்; அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது. எண் 35:33 39 அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர். 40 எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். 41 வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்; அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர். 42 அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்; தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர். 43 பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். 44 எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். 45 அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்; 46 அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார். 106:40-46 <=> நீத 2:14-18 47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம். 48 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் 'ஆமென்' எனச் சொல்வார்களாக! அல்லேலூயா! 106:47-48 <=> 1 குறி 16:35-36


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!