Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 47

பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்: மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு: மெல்லியலாள் , இனியவள் என்று இனி நீ அழைக்கப்படாய்.2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை: உன் முக்காடுதனை அகற்றிவிடு: உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்: உன் மானக்கேடு வெளிப்படும்: நான் பழி வாங்குவேன்: எந்த ஆளையும் விட்டுவையேன்.4 எங்கள் மீட்பரின் பெயர் படைகளின் ஆண்டவர் : அவரே இஸ்ரயேலின் தூயவர் .5 மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்: இனி நீ அரசுகளின் தலைவி என அழைக்கப்படமாட்டாய்.6 நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்: என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்: அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்: நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை: முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய். 7 என்றும் தலைவி நானே, என்றாய் நீ: இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை: பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.8 இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை: நான் கைம்பெண் ஆகமாட்டேன்: பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்:9 இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்: பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.10 உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்: என்னைக் காண்பார் யாருமில்லை என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன: எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.11 தீமை உன்மேல் திண்ணமாய் வரும்: அது தோன்றும் திக்கை நீ அறியாய்: அழிவு உன்மேல் விழும்: அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது: நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்: ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்: ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்: வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்: தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்: அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று: எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.15 நீ முயன்று பயின்றவையும் இவ்வாறே அழிவுறும்: உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்: ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்: உன்னை விடுவிக்க எவரும் இரார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!