Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

ஆமோஸ்

அதிகாரம் 7

வெட்டுக்கிளிகளின் காட்சி
1 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.2 நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறயவன் அல்லவா! என்றேன்.3 ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: இது நிகழாது, என்றார் தலைவராகிய ஆண்டவர்.

நெருப்பின் காட்சி
4 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை வருவித்தார்: அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது.5 நான், தலைவராகிய ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா! என்றேன்.6 ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: இதுவும் நிகழாது, என்றார் தலைவராகிய ஆண்டவர்.

தூக்கு நூல் குண்டின் காட்சி
7 ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: தூக்கு நூல் குண்டின் துணைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு மதில் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்கு நூல் குண்டு இருந்தது.8 ஆமோஸ்! நீ காண்பதென்ன? என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், அது தூக்கு நூல் குண்டு என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்: இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை9 ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும்: இஸ்ரயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்: எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்.

ஆமோசும் அமட்சியாவும்
10 பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.11 அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், எரொபவாம் வாளால் மடிவான்: அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும் என்று ஆமோஸ் சொல்லுகிறான்.12 பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.13 பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் என்று சொன்னான்.14 ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.15 ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு என்று அனுப்பினார்.16 எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே: ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே என்று நீ சொல்கிறாய்!17 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்: உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்: உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்: இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!