Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

நாகூம்

முன்னுரை

இஸ்ரயேலின் மிகப் பழைய, கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகராம் நினிவே பெருநகரின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும் கவிதையாக "நாகூம்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. ஆணவம் கொண்டு மற்ற மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் ஆண்டவர் தண்டிக்காமல் விடமாட்டார் என்பதை இந்நூல் விளக்குகிறது.

நூலின் பிரிவுகள்
  1. நினிவேயின் மீது ஆண்டவரின் தீர்ப்பு 1:1 - 15
  2. நினிவேயின் வீழ்ச்சி 2:1 - 3:19


அதிகாரம் 1
1 நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல். 1:1-3:19 <=>
எசா 10:5-34; 14:24-27;
செப் 2:13-15

நினிவேயின் மீது ஆண்டவர் சினம் கொள்ளல்
2 ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்; பழிவாங்குபவர்; ஆண்டவர் பழிவாங்குபவர்; வெகுண்டெழுபவர்; தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்; தம் பகைவர்மீது சினம் கொள்பவர். 3 ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்; ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி; மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்! 4 அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்; ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்; பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன; லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன. 5 அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன; குன்றுகள் கரைகின்றன; நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன. 6 அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது; பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன. 7 ஆண்டவர் நல்லவர்; துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்; அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார். 8 தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்; தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார். 9 ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்; தீமை மீண்டும் தலைதூக்காது. 10 குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள். 11 ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான். 12 ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்; உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன். 13 இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்." 14 ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே: "உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்; உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்; ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன். 15 'வெற்றி! வெற்றி!' என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்து விட்டான். எசா 52:7


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!