Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மீக்கா

அதிகாரம் 3

இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல்
1 அப்பொழுது நான் கூறியது: யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!2 நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்: என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்:3 என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்: அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்.4 அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்: ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்: ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன.5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!' என உரக்கச் செல்கின்றார்கள்: வாய்க்குத் தீனி போடாதவரிடம் 'புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்.6 ஆதலால் இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது: முன்னுரைத்தல் இராது: காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்: இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது: பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்: முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்: அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.8 ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.9 யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்: நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்: நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.10 இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்: அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்: இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்: ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது என்று சொல்லிக் கொள்கின்றார்கள்.12 ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்: எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்: கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!