Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)

அதிகாரம் 2

ஆண்டவரிடம் பற்றுறுதி
1 குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.2 உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு: உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே.3 ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்: அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய்.4 என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்: இழிவுவரும்போது பொறுமையாய் இரு.5 நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது: ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.6 ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்: அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து: அவரிடம் நம்பிக்கை கொள்.7 ஆண்டவருக்கு அஞ்சுவோரே. அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்: நெறி பிறழாதீர்கள்: பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.8 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது.9 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்: நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.10 முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?11 ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்: பாவங்களை மன்னிப்பவர்: துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர். 12 கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும் இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடு வரும்!13 உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை: எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.14 தளர்ச்சி அடைந்தோரே, உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்! ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்?15 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவருடைய சொற்களைக் கடைப்பிடிப்பர்: அவர்மீது அன்புசெலுத்துவோர் அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.16 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர்தம் விருப்பத்தையே தேடுவர்: அவரிடம் அன்பு பாராட்டுவோர் அவர்தம் திருச்சட்டத்தில் நிறைவு அடைவர்.17 ஆண்டவருக்கு அஞ்சுவோர் முன்னேற்பாடாய் இருப்பர்: அவர் திருமுன் தங்களைத் தாழ்த்திக் கொள்வர்.18 'ஆண்டவரின் கைகளில் நாம் விழுவோம்: மனிதரின் கைகளில் விழமாட்டோம்: ஏனெனில் அவரது பெருமையைப் போன்று அவர்தம் இரக்கமும் சிறந்தது' என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!