Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு)

முன்னுரை

'இனிமை மிகு பாடல்' என்னும் இந்நூல் உண்மையில் ஒரு தொகை நூல்; காதற் கவிதைகளின் ஒரு தொகுப்பு. யூதப் பரம்பரையின்படி, இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களின் ஆசிரியர் மாமன்னர் சாலமோன்; ஆனால் சாலமோனின் காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இந்தத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை மறுத்தல் இயலாது.

இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள் பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களித்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிப்பவை இவை என்பர் சிலர்; பாலஸ்தீன நாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின் போது பாடப்பட்டவை என்பர் மற்றும் சிலர். ஆனால் ஆண் - பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுகள் இவை என்பதே ஏற்புடையது.

இந்தத் தொகை நூலில் காணும் பாடல்களின் எண்ணிக்கை பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மொத்தம் இருபத்தெட்டுப் பாடல்களாகக் காண்பதே இங்குப் பின்பற்றியுள்ள கொள்கை.

காதலுணர்வு புனிதமானது; இயற்கையின் அன்பளிப்பு; கடவுளின் கொடை; இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒரு முறை கூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூல்களில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று. ஆண் - பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம் என்னும் அளவில் இப்பாடல்கள் கடவுள் - இஸ்ரயேல், கிறிஸ்து - திருச்சபை, கடவுள் - ஆன்மா ஆகியோர்க்கிடையில் நிலவும் அன்புணர்வையும் அன்புறவையும் குறிக்கப் பயன்படுதல் மிகவும் பொருத்தமே என்க.



அதிகாரம் 1

சாலமோனின் தலைசிறந்த பாடல்
பாடல் 1: தலைவி கூற்று
1 சாலமோனின் தலைசிறந்த பாடல் 1 அர 4:32. 2 தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக! ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!3 உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது: உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது: எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.4 உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்: அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்: திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்: திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்!

பாடல் 2: தலைவி கூற்று
5 எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்: சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.6 கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்: நான் கறுப்பானேன்: என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்: திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்: என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!

பாடல் 3: தலைவன் - தலைவி உரையாடல்
7 என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!8 பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ: இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!

பாடல் 4: தலைவன் - தலைவி உரையாடல்
9 என் அன்பே, பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.10 உன் கன்னங்கள் குழையணிகளாலும் உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன.11 பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்: வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.12 என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே, என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது.13 என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென என் மார்பகத்தில் தங்கிடுவார்.14 என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!

பாடல் 5: தலைவன் - தலைவி உரையாடல்
15 என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்!16 என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்!17 நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்: நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!