Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மீக்கா

அதிகாரம் 4

ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி (எசா 2:1-4)
1 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை: மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்: குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.2 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்: அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள்: ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்: எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.3 அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்: தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்: அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்: ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.4 அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்: அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை: ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது.5 மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும். நாமோ, நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு என்றென்றும் பணிந்திருப்போம்.6 அந்நாளில், நான் முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்: விரட்டியடிக்கப்பட்டோரையும் என்னால் தண்டிக்கப்பட்டோரையும் ஒன்றுகூட்டுவேன் என்கிறார் ஆண்டவர்.7 முடமாக்கப்பட்டோரை எஞ்சியோராய் ஆக்குவேன்: விரட்டியடிக்கப்பட்டோரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்: அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.8 மந்தையின் காவல் மாடமே! மகள் சீயோனின் குன்றே! முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்: மகள் எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.9 இப்போது நீ கூக்குரலிட்டுக் கதறுவானேன்? பேறுகாலப் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகின்றாய்? அரசன் உன்னிடத்தில் இல்லாமற் போனானோ? உனக்கு அறிவு புகட்டுபவன் அழிந்தொழிந்தானோ?10 மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு: ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்: வயல்வெளிகளில் குடியிருப்பாய்: பாபிலோனுக்குப் போவாய்: அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்: உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.11 இப்பொழுது, வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்: சீயோன் தீட்டுப்படட்டும்: அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும் என்று சொல்லுகின்றார்கள்.12 ஆனால் அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல் அவர் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.13 மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி: நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்: உன்னுடைய குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்: மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப் போடுகிறாய்: அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்: அவர்களது செல்வங்களை அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய்


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!