Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)

முன்னுரை
ஆசிரியர்

திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். 'நாங்கள் பயணம்செய்தோம்', 'நாங்கள் தங்கியிருந்தோம்', 'நாங்கள் போதித்தோம்' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (16:10-17; 20:5-15; 21:1-18: 27:1-28:16). (ஆசிரியரைப்பற்றிய பிற குறிப்புகளை லூக்காநற்செய்தி நூல் முன்னுரையில் காண்க).

சூழல்

கிறிஸ்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கமளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருததூதராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட பவுல் யூதருக்கு எதிராகப் பெருந்தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை ஆசிரியர் எழுதுகிறார். இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறை வார்ததைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத் தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே நூலின் முடிவுரையாக அமைகின்றது.

உள்ளடக்கம்

"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா, முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (1:8) என்னும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் கூற்றே இந்நூலுக்குச் மையச் செய்தியாக அமைகின்றது. யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்ததைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் "தூய ஆவியின் பணிகள்" எனவும் அழைக்கலாம். பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின் அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்தியல் விளக்கங்களை அளிக்கின்றன. பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும்,எருசலேம் சங்கமும் உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன. கிறிஸ்தவர்களைப்பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம்பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொணடாற்றுதல், அன்புப் பகிர்வு (11:27-30; 2:42-47; 4:32-37) போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

அமைப்பு
  1. முன்னுரை (விண்ணேற்றம்) 1:1 - 11
  2. எருசலேமில் சான்று பகர்தல் 1:12 - 8:3
  3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் 8:4 - 12:25
  4. உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் 13:1 - 28:31


அதிகாரம் 1

1. முன்னுரை
தூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி
1 தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். 2 விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.4 அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்.5 யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கூறினார்.

இயேசுவின் விண்ணேற்றம்
6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள்.7 அதற்கு அவர், என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல:8 ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார்.9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.

2. எருசலேமில் சான்று பகர்தல்
மத்தியா தெரிந்தெடுக்கப்படுதல்
12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது.ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலை. 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.21 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று.22 யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.23 அத்தகையோருள், இருவரை முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.24 பின்பு அவர்கள் அனைவரும், ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான்.25 அந்த யூதாசுக்கு பாதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.26 அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!