Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)

அதிகாரம் 3

பெற்றோர்பால் கடமை
1 குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய எனக்குச் செவிசாயுங்கள்: நான் கூறுவதன்படி செயல்படுங்கள்: அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்.2 பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தியுள்ளார்: பிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.3 தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்.4 அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.5 தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்: அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும்.6 தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்: ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர்.7 தலைவர்கள் கீழ்ப்பணியாளர்கள் போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.8 சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்: அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.9 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்: தாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும்.10 உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்: உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது.11 தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை: தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை.12 குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே.13 அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.14 தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.15 உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்: பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்.16 தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்: அன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.

தாழ்ச்சி
17 குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.18 நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.19 [உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர். ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.][ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது 20 ஆண்டவரின் ஆற்றல் பெரிது: ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். 21 உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே: உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. 22 உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்: ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை. 23 உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே: ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. 24 மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது: தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன. 25 [கண் இல்லையேல் பார்க்க முடியாது. அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.][ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது

செருக்கு
26 பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்: கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர். 27 அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்: பாவிகள் பாவத்தைப் பெருக்குவர். 28 இறுமாப்புக்கொண்டோரின் நோக்கு மருந்து இல்லை: ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது. 29 நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்: ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

ஏழைகளுக்கு இரங்கல்
30 எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்: தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும். 31 நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர் தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்: தங்களது வீழ்ச்சிகாலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!