Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்)

முன்னுரை

இத்திருமுகம் பொதுத்திருமுகங்களில் ஒன்றாக இருப்பினும் வழக்கமான வாழ்த்து, வாசகர் பற்றிய குறிப்பு எதுவும்இதில் இல்லை. எனினும் இதன் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினராக அல்லது சபையினராக இருந்திருக்க வேண்டும். அங்கு முதியோர் இளையோர் அனைவரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை நம்பிக்கையில் முதியோராகவும் இளையோராகவும் கூடக் கருதலாம்.

ஆசிரியர்

யோவான் நற்செய்திக்கும் இத்திருமுகத்திற்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. மொழி நடை, கலைச் சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றில் இந்த ஒற்றுமை குறிப்பாகக் காணப்படுகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள ஒரு சில வேறுபாடுகள் எளிதில் விளக்கக் கூடியவையாய் இருக்கின்றன. எனவே இரண்டும் யோவான் சமுகத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். திருத்தூதர் யோவான் நேரடியாக இதனை எழுதினாரா என்பது பற்றி அறுதியிட்டுக் கூற முடியாது. இத்திருமுகம் யோவான் நற்செய்திக்கு முன்னுரையாக எழுதப்பட்டது என்பர் ஒரு சிலர். இது யோவான் நற்செய்தியில் வரும் சில கருத்துக்களுக்கு விளக்கமாக எழுதப்பட்டது என்பர் வேறு சிலர்.

நோக்கம்

அக்காலத்தில் எழுந்த சில தவறான கருத்துக்களை, குறிப்பாக இயேசுவைப்பற்றிய தவறான கருத்துக்களைக் களைவது இத்திருமுகத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக தெரிகிறது. கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகம் மற்றும் சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஆழப்படுத்துவதும் (3:17) திருமுகத்தின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். இச்சமூகத்தின் உறுப்பினர்கள் (2:19) இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் (2:22). அத்துடன் அவர் உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை (4:2). மீட்புக்கும் நலலொழுக்கம், அன்பு போன்றவற்றுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் கூறி வந்தார்கள். திருமுக ஆசிரியர் இப்படிப்பட்டத் தவறுகளைக் களைய முற்படுகிறார்.

உள்ளடக்கம்

இயேசு உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்று கூறி, அதை அவர்கள் நம்ப வேண்டும் என்கிறார் ஆசிரியர்; அன்புகூர்பவர்கள் சகோதர சகோதரிகளிடமும் அன்பு கூர வேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறார். அன்பு பற்றி மிகுதியாகப் பேசுவதால் இதை அன்புக் கடிதம் எனலாம்.

அமைப்பு
  1. முன்னுரை (வாழ்வு அளிக்கும் வாக்கு) 1:1 - 4
  2. ஒளியும் இருளும் 1:5 - 2:29
  3. கடவுளின் பிள்ளைகளும் அலகையின் பிள்ளைகளும் 3:1 - 24
  4. உண்மையும் பொய்மையும் 4:1 - 6
  5. அன்பும் நம்பிக்கையும் 4:7 - 5:12
  6. முடிவுரை 5:13 - 21


அதிகாரம் 1

1. முன்னுரை
வாழ்வு அளிக்கும் வாக்கு
1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்: கண்ணால் கண்டோம்: உற்று நோக்கினோம்: கையால் தொட்டுணர்ந்தோம். 2 வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த நிலைவாழ்வு பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.3 தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.4 எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

2. ஒளியும் இருளும்
ஒளியில் நடத்தல்
5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்: அவரிடம் இருள் என்பதே இல்லை.6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்: உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

பாவத்தை விட்டுவிடுதல்
8 ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்: உண்மையும் நம்மிடம் இராது.9 மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்.10 நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!