Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

விடுதலைப்பயணம் (யாத்திராகமம்)

முன்னுரை

ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை 'விடுதலைப் பயணம்' என்னும் இந்நூல் விரித்துரைக்கிறது.

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின்மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும் அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார் இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்கு முறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.

நூலின் பிரிவுகள்
  1. இஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல் 1:1 - 15:21
      அ) எகிப்தில் அடிமைத்தனம் 1:1 - 22
      ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும் 2:1 - 25
      இ) மோசேயின் அழைப்பு 3:1 - 4:31
      ஈ) மோசேயின் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல் 5:1 - 11:10
      உ) பாஸ்கா-எகிப்தினின்று வெளியேறல் 12:1 - 15:21
  2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27
  3. பத்துக் கட்டளைகள்- உடன்படிக்கை நூல் 19:1 - 24:18
  4. உடன்படிக்கைக் கூடாரம்- வழிபாட்டு ஒழுங்கு முறைகள் 25:1 - 40:38


அதிகாரம் 1

எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமை வாழ்க்கை
1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா:3 இசக்கார், செபுலோன், பென்யமின்:4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.ஒரு பழைய மொழிபெயர்ப்பில் 'எழுபத்தைந்து' எனக் காணப்படுகிறது (காண். திப 7:14) 6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.7 இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்″ ″ என்று கூறினான்.11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்:14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்? என்று கேட்டான்.19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, ″ ″ எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது″ ″ என்று காரணம் கூறினர்.20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ″ ″ பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்″ ″ என்று அறிவித்தான்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!